Friday, October 1, 2010

எந்திரன் - விஷுவல் விருந்து!!


காத்திருந்த நாட்கள் முடிந்து திரையைத் தொட்டுவிட்டது எந்திரன்! இது போன்ற ஒபனிங் இந்தப் படத்தில் பணி புரிந்த ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய் இவர்களுக்கு இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே. இது போல் இன்னொரு படம் தமிழில் வருமா என்பதும் கேள்விக் குறியே! எதிர்பார்ப்பைத் தோற்றுவிப்பதை விட அதைப் பூர்த்தி செய்வது அதை விட கடுமையான சவால். அதில் முழு வெற்றி பெற்றிருக்கிறான் எந்திரன்.


ஷங்கரின் எல்லா படத்திலும் கதை என்பது ஒரு நூலிழை அளவுதான் இருக்கும். அதை எப்படி காட்சிப்படுதுகிறார் என்பதில்தான் மலையளவு வேறுபட்டு வெல்கிறார். எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல என்றாலும், சொல்லப்பட்ட விஷயம் இந்திய சினிமாவுக்கே புதுசு என்பதால், எக்கச்சக்கமாக எல்லோர் பல்சும் எகிறுகிறது. "இது நடந்தா என்ன ஆகும்?" அப்படிங்கற ஒரு வரில எல்லா படத்தையும் வரையறைப் படுத்திடலாம். அந்த ஒரு வரி புதுசா, கவருகிற மாதிரி இருந்தாலே பாதி வெற்றிதான். இந்தப் படத்தில், "விஞ்ஞானி வசீகரன் உருவாக்கும் ரோபோ, அவருக்கே ஆப்பு வைக்க நினைத்தால் என்ன ஆகும்?" அப்படிங்கறதை முடிஞ்ச அளவுக்கு எளிமையா, அழகா, விறுவிறுப்பா, புதுசா புன்னகையோட சொல்ல வர்றான் எந்திரன்.

இவ்வளவு பெரிய படத்துக்கு வலுவான கதாபாத்திரங்களும் திரைக்கதையும் இல்லாவிட்டால் அனைத்தும் "விழலுக்கு இறைத்த நீர்". ஷங்கர் மீண்டும் தான் ஒரு தேர்ந்த திரைக்கதை எழுத்தாளர் என்பதை நிரூபித்திருக்கிறார் (வெகு சில காட்சிகளைத் தவிர). ஒரு சாமானியனுக்கு அதிகப்படியான டெக்னாலஜி வார்த்தைகளைப்  போட்டுக் குழப்புவதை தவிர, மற்றபடி அழகாகப் படிப்படியாக படத்தை நம் கண் முன் விரிக்கிறார். 'நிறைய பிரச்சனை இருந்தால் எதைத் தீர்ப்பது என்று தெரியாமல் திரைக்கதை தத்தளிக்கும்' என்பது அடிப்படை விதி. அதே சமயம், ஒன்று இருந்தாலும் சில சமயங்களில் போர் அடித்து விடும். ஆனால் ஒரே ஒரு ஆதாரமான பிரச்சனையை  வைத்துக் கொண்டு மூன்று மணி நேரம் கத்தி மேல் நடந்து இலக்கை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது. அதற்கு பக்கபலமாக மூன்று காரணங்கள் சொல்லலாம். 1. ரஜினி 2. ரஜினி 3. ரஜினி.

இந்த வயதிலும், அவரின் அர்ப்பணிப்பு, எந்த ஒரு காட்சியையும் அனாயாசமாக அதனுடைய உச்சத்துக்கு உயர்த்தும் திறமை, அந்த் திறமையை கையாளும் லாவகம், காமெடியிலும் வில்லத்தனத்திலும் மிஸ் ஆகாத டைமிங் சென்ஸ் என ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவரின் உழைப்பு காட்சியின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது. அவரின் வழக்கமான மசாலாவில் இருந்து விடுபட்டு நடித்ததற்க்கே அவருக்கு, அவர் உயரத்திற்கு ஒரு பூச்செண்டு கொடுக்கலாம். வசீகரன், ரோபோவை கண்டுபிடித்து ஐஸ்சை வெளிநாடு சென்று கட்டிப்பிடித்து பாடிவிட்டு அவரைத் தவிர அனைவரிடமும் அடி வாங்கி கிளைமாக்ஸ்ஸில் மட்டும் போனால் போகிறது என ஏதோ உருப்படியாக செய்கிறார். உண்மையிலே படத்தின் ஹீரோ கண்டிப்பாகச் சிட்டி என்னும் ரோபோ ரஜினிதான். முழுப் படமும் சிட்டியின் ராஜாங்கம்தான். போலீசிடம் நக்கல், மாரியம்மன் தரிசனம், குழந்தையின் பிரசவம், ட்ரெயின் பைட், இயந்திரக் காதல், ஐஸ்ஸுடன் நடனம்  என கிடைத்த பால் எல்லாம் சிக்சுக்கு பறக்கிறது. பஞ்ச் டையலாக் தவிர ரஜினியின் அனைத்து திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் ஷங்கர். இரண்டாம் பாதியில் பரிமாணம் மாறும் போது ரஜினியின் உள்ளே இருக்கும்  இயல்பான வில்லன் சடாரென டாப் கியரில் நம்மை இழுத்துச் செல்கிறது. எத்தனை நாள் ஆச்சு இப்படி ஒரு ரஜினியைப் பார்த்து? குழந்தைகள் முதல் கிழவன் வரை அனைவரையும் கவருவான் சிட்டி.

இயந்திரத்திற்குக் காதல் வர வேண்டும் என்றால் கண்டிப்பாக அது ஒரு உலக அழகியாக இருக்க வேண்டும் என்பது ரஜினியின் பேரனுக்கே தெரியும். ஐஸ்வர்யா ராயைத் தவிர இந்த பாத்திரத்தில் வேறு யாரம் இவ்வளவு பாந்தமாக பொருந்தி இருக்க முடியாது. சில க்ளோஸ் அப் ஷாட்ஸ் தவிர இன்னும் அழகாகவே இருக்கிறார். அவருடைய நடனத்தின் நளினம், நமக்கு மெய்சிலிர்ப்பு. அவ்வளவு இயல்பாக ஏதோ வெந்நீர் சுட வைப்பது போல சுலபமாக ஆடிச் செல்கிறார். (ரஜினி அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்). ராவணனை ஒப்பிடும் போது இதில் இன்னும் அழகாகத் தமிழையும் நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிட்டி,  வசீகரனைக் கண்டுபிடிக்கும் காட்சி ஐஸின் நடிப்புக்கு 'பானை சோறு பதம்'.

இவ்வளவு பெரிய சயன்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கு நிச்சயம் அனிமட்ரானிக்ஸ், லைட் அண்ட் மாஜிக் போன்ற ஹாலிவுட் நிறுவனங்கள், பலமான அடித்தளம். படத்தின் முழுத் தரமும் இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. படம் நெடுக ஒரு இடம் விடாமல் மிரட்டி இருக்கிறார்கள். அதுவும் அந்தக் கடைசி 30 நிமிடத் திருப்பங்களும் கிளைமாக்ஸ் காட்சிகளும் நம் கண்களைத் திரையை விட்டு அகல விடுவதில்லை. இரண்டு ரஜினி வரும் எல்லா இடங்களாகட்டும், 1000 ரஜினி வரும் அரிமாவாகட்டும், எதிலும் துளிக் கூட கிராபிக்ஸ் என்பது கண்டுபிடிக்க முடியாத படி சிறப்பாக இருக்கிறது. இதற்காவே 'கொசுக் கார்ட்டூன்களையும்', கார் சேசிங்கில் சில ஓட்டைகளையும் மன்னிக்கலாம்.

சுஜாதா அவர்களின் கடைசிப் படம். சுஜாதா சில வருடங்கள் முன்பு கூறி இருந்தார் "தமிழ் சினிமாவில், நாட்கள் தள்ளிப் போனாலும் இரண்டு படங்கள் நிச்சயம் ஒரு நாள் எடுக்கப்படும். ஒன்று 'பொன்னியின் செல்வன்' இன்னொன்று 'ரோபோ' ". ஷங்கரும் கார்க்கியும் சொதப்பி இருந்தாலும் ஆங்காங்கே சுஜாதாவின் ஒரு வரி வைரங்கள் மின்னத் தவறவில்லை. உதாரணம் "கடவுள் இருக்கிறாரா?" என்கிற கேள்வி. ரோபோவிடம் மக்கள் கேட்கும் கேள்விகளை பாமரனுக்கும் புரிவது போல எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்திருக்கலாம். படத்தின் ஆதார ஐடியா சுஜாதாவினுடையது. ஆனால் அவருக்கு உரிய மரியாதை செய்ய ஷங்கர் தவறி விட்டார். டைட்டில் போடும் முன்பு ஒரு நன்றி அஞ்சலி தெரிவித்திருக்கலாம்.

கருணாசும் சந்தானமும் காமடி பண்ணும் போது யாரையாவது தியேட்டருக்கு அனுப்பி 'கிச்சு கிச்சு' மூட்டச் சொல்லலாம். சிட்டி, மொத்தச் சிரிப்புகும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள, இவர்கள் இருவரும் அதற்குத் தண்டனையாக சிட்டியிடமே செருப்படி வாங்குகிறார்கள்.

'இரும்பிலே ஒரு இதயம்' தவிர அனைத்துப் பாடல்களும் ஷங்கரின் பிரம்மாண்டத்தையும், புதிய இடங்களையும், ஐஸ்-ரஜினியின் அழகையும் அள்ளி வந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதுவும் 'காதல் அணுக்கள்' பாடல், தென்றலோடு வரும் ஐஸ்க்ரீம்.

ரஹ்மானின் பாடல்கள் பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. ஏற்கனவே அது உயரம் தொட்டு விட்டது. அவரின் பின்னணி இசை புதிய சிகரத்தை தொட்டிருக்கிறது. காட்சியும் இசையும்  ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு முந்துகிறது. கார் சேசிங்கில் வரும் இசையின்  புதிய ஸ்டைல், கிளை மாக்ஸ் சிம்பொனி என நமக்கு புதிய இசை அனுபவம். இன்னொரு முறை பார்க்கும் போதுதான் அதன் முழு வீரியமும் புரியும் என நினைக்கிறேன்.

ரத்னவேலு, சாபு சிரில், ஆண்டனி என அனைவரின் பங்களிப்பும் அபாரமானது.

படத்தில் எனக்குத் தெரிந்த சில சறுக்கல்களும் இருக்கின்றன.

1. முதல் பெரிய ஓட்டை: வில்லன். டானி டென்க்சாங்பா அட்சரம் சுத்தமாக ஹிந்தியில் பேசி இருக்கிறார். உதட்டசைவில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வார்த்தை கூட தமிழோடு பொருந்தி வரவில்லை. இதனாலேயே இவர் மனதில் ஓட்ட மறுக்கிறார். தமிழுக்கு மட்டுமாவது யாரவது நல்ல தமிழ் தெரிஞ்ச பெரிய நடிகரை உபயோகப் படுத்தி இருக்கலாம். ஷங்கரின் வழக்கமான perfectionக்கு ஒரு பேரிடி. எப்படி கோட்டை விட்டார் எனத் தெரிய வில்லை!! {தமிழுக்கு சத்யராஜ் இருந்திருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும்!!}
2. சாமானியனைச் சுற்றி விடும் அதிகப்படியான ஆங்கில டெக்னாலஜி வார்த்தைகள் (IP address, Worming-Deworming). இயன்றவரை தமிழ் படுத்தி இருக்கலாம். இல்லை புரியும் படி சிறிது மாற்றி எடுத்திருக்கலாம்.
3. இரண்டாம் பாதியின் முதல் 15 நிமிடங்கள். கொசுவும் கலாபவன் மணியும் வந்து மொக்கை போடுகிறார்கள். சாப்பிட்ட முந்திரிப்பருப்புக்கும் சிக்கன் வறுவலுக்குமாவது கொஞ்சம் ஷங்கர் யோசித்திருக்கலாம்.
4. வில்லன் ரஜினியின் காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.
5. விஞ்ஞானி ரஜினியின் மேக்கப்பில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஒட்டு தாடியும் மீசையும் திரையை நெருடுகிறது.

இவை எல்லாம் சிறிய விஷயங்களே. இவை அனைத்தையும் மறக்கும் அளவிற்கு படம் ஜோராய் நம்மை ஆட்கொள்கிறது.
எந்திரன், main stream ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் இருக்கலாம். ஆனால் மற்ற அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும் என எண்ணுகிறேன்.

எந்திரன் அனைவரையும் ஈர்க்கும் மந்திரன்! DONT MISS IT!

2 comments:

  1. படம் நிஜமாகவே பிரம்மாண்டம் தான் :-)
    Hats off to shankar & rajini.

    ReplyDelete
  2. can't wait to watch this film...

    ReplyDelete