Sunday, January 10, 2010

கண்ணதாசன் - மாண்டவர் மீண்டும் வாழ்கிறார்!

           இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த/பிடித்த பாடல். பலரையும் பாதித்த பாடலும் கூட. இந்த பாடலுக்கு ஒரு பானை சோறு. 
           கவிஞர் வாலி ஒரு முறை ஒரு பேட்டியில் இந்த பாடல் அவருடைய வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியதாக சொல்லிருந்தார். அவர் திரைப் பாடலாசிரியர் வாய்ப்புக்காக பல நாள் முயற்சித்து, சில படங்கள் கிடைத்து, அதுவும் தள்ளிப் போயிருந்த சமயங்களில், சிறிது விரக்தியில் இருந்தார். அந்த சமயத்தில் டெல்லியில் ஒரு வேலையில் வந்து  சேரச் சொல்லி அவருக்கு அஞ்சல் வந்திருந்தது. சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு அதில் சேர்வதாக முடிவெடுத்து, கிளம்புவதற்கு முன்பு கடைசியாக நண்பர் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை பார்க்கச் சென்றிருந்தார். ஸ்ரீனிவாஸ் அவர்கள் அன்று ஒலிப்பதிவு செய்த பாடலை அவருக்காக பாடிக் காட்டினார். அந்தப் பாடலைக் கேட்டவுடன் கவிஞர் வாலி மறுநாள் டெல்லி செல்வதற்காக பதிவு செய்திருந்த டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு மீண்டும் பாடலாசிரியவதர்கான தனது முயற்சியை தொடர்ந்தார். அதன் பின் நடந்தது வரலாறு. (நன்றி: தினத்தந்தி;வராலாற்று சுவடுகள்)
         இப்படிப்பட்ட எளிமையான நடையில் ஆழமான பாடல்கள் இன்று எழுதுவாரில்லை. வாழ்க்கையில் நிலை கொள்ளாமல் தவிக்கும், வருத்தங்கள் தழுவும் எல்லா பொழுதுகளிலும் இந்த பாடலைக் கேட்டால் மனம் அமைதி பெறும். அமைதி பெறாவிட்டால் திரும்ப கேளுங்கள்! அப்படியும் பெறாவிட்டால்...உங்களுக்கு தமிழ் தெரியாது என்று நீங்கள் அன்று கண்டு கொள்ளலாம்.


படம்: சுமைதாங்கி
பாடல் வரிகள்: கண்ணதாசன்


மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை...
வாடி நின்றால் ஓடுவதில்லை...
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு