Sunday, June 27, 2010

நவீன ராமாயணம் (ராவணன்)


மணிரத்னம் ஆய்தஎழுத்துக்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஒரு வீட்டுக்கு இரு வாசல் வைத்து விற்க முயன்றிருக்கிறார். வழக்கமான சமீப கால மணிரத்னம் படங்கள் போல நமக்கு கால்வாசி குழப்பம், கால்வாசி பிரமிப்பு, பாதி ஏமாற்றம் எனக் கலந்துகட்டி, பாவக்காய் ஃப்ரை போல பார்க்க அழகாக, ஆனால் சுவைத்தால் கசப்பாக இருக்கிறது. படத்தின் ஒன் லைன் "ராமாயணத்தில் ராவணன் ஹீரோவாக இருந்தால் என்ன ஆகும்?" அவனவன் ரூம் போட்டு கதையை யோசித்துக் கொண்டிருக்க மணி கதையை எளிதாக ராமாயணத்தில் இருந்து 'லபக்'க்கி இருக்கிறார், கதாபாத்திரங்கள் தொடங்கி. இந்தியாவின் தலை சிறந்த டைரக்டர்களுள் ஒருவர் என சொல்லப்படும் மணிரத்னத்திடமிருந்து இது வருவதை ஒரு ரசிகனாக ஜீரணிக்க முடியவில்லை.

ராமன் - ப்ருத்விராஜ்
சீதா - ஐஸ்வர்யா ராய்
ராவணன் - விக்ரம்
அனுமார் - கார்த்திக்
விபீஷணன் - முன்னா
கும்பகர்ணன் - பிரபு (என்ன ஒரு தோற்ற ஒற்றுமை!)
சூர்ப்பனகை - ப்ரியா மணி
லட்சுமணன் - ஜான் விஜய் (கொஞ்சம் கொஞ்சம்)

தங்கையின் தற்கொலை மற்றும் கற்பழிப்புக்கு பழி வாங்க சீதையை களவாண்டு வருகிறார் ராவணண். சீதையின் அழகில் மனம் தத்தளிப்பதில் அவரை கொல்லாமல் வாய்தா வாங்குகிறார். தேவ் ஆகிய ராமன் சீதையைத் தொடர்ந்து தேடி வருகிறார். ராவணன் அவருக்கு வழியில் பல ஃப்யூஸ் போன பல்புகளைக் கொடுத்து ராமனின் ஆள் பலத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் போதே சீதைக்கு தான் ஒரு நம்பியார் வேடத்தில் இருக்கும் எம்ஜியார் என்றும் அவள் கணவன் ராமனும் சில நேரங்களில் நம்பியாராக இருந்ததை சுட்டி(க்) கதை சொல்கிறார். சீதை ராமனை நம்பியார் என ஏற்க மறுத்தாலும் ராவணனை மதித்து அவனுக்காகவும் கண்ணீர் உகுக்கிறாள். இதனால் ராமனை எச்சரித்து சீதையை விடுவிக்கிறான் ராவணன். கற்பை உரசிய ராமனுக்கு தண்டனை தராமல் கடைசியில் சீதை என்ன செய்கிறாள்? என்பதை உலக சினிமாவுக்கே தெரியாமல் போன ஒரு புதிய கிளைமாக்ஸில் இயக்குனர் சொல்கிறார். இரண்டு மொழிகளின் மக்களையும் திருப்திப் படுத்த நினைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை, இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் நடுவில் தள்ளாடுகிறது.

ராவணனிடம் பரிதாபம் வந்து, ராமனை வில்லனாக மக்கள் மனதில் சித்தரிக்க முயன்றிருக்கும் மணிரத்னத்துக்கு, சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் மட்டுமே உதவி இருக்கிறார்கள். இருவரும் இயற்கையை கடலாக படமெங்கும் அள்ளி இறைக்கிறார்கள்.  "எங்கே ஒளிந்திருந்தது இந்தியாவில் இத்தனை அழகும்?" எனக் கண்களும் மனமும் விரிகிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் தண்ணீர். நமக்கே ஜலதோஷம் பிடிக்கும் போல. மழை தூறலாக தூவிக் கொண்டே இருக்கிறது! காடுகளின் பனி கலந்த மேகமும், இயல்பான வெய்யில் கலந்த மழையிலும், அருவியின் சாரலிலும், ஐஸின் மேக்அப் இல்லா அழகிலும் (க்ளோசப்பில் கால் கிழவி), தொங்கு பாலக் கிளைமாக்ஸிலும் நம் மனம் மலையேறி ஆச்சர்யப்படுகிறது. சமீர் சந்தாவின் உழைப்பிலும் பிரமாண்டத்தின் மெனக்கெடல் தெரிகிறது. காட்டின் நடுவில் முளைக்கும் திடீர் பாழடைந்த அரண்மனைகள் கொஞ்சம் நெருடினாலும் அதன் நேர்த்தியும் இயல்பும் நம்மை ஈர்க்கிறது. டெக்னாலஜி ரீதியாக இந்தப் படம் சமீப காலத்தில் வந்தவற்றில் தனித்து, சிறந்து நிற்கிறது. இதற்காகவே மற்றதை மன்னிக்கலாம் என்ற பலமே படத்தை இரண்டு மணிநேரம் தாக்குப் பிடிக்க வைத்திருக்கிறது.

ராவணனின் உணர்ச்சிகளை நமக்குக் கடத்த முயலும் திரைக்கதை யுக்திகளில், மணிரத்னம் செமையாக அடி வாங்குகிறார். சுஹாசினியும் அவரை உருட்டு கட்டையால் (நம்மையும்தான்) போகிற போக்கில் நாலு சாத்து சாத்துகிறார். கதை மாந்தர்கள் முகத்தில்  அடர்த்தியாகவும், திட்டுத் திட்டாக நமது முகத்திலும் கரியைப் பூசுகிறார். இயற்கையின் தாக்கம் தவிர கதையின் உணர்ச்சி நம்மை உரசிக் கூடப் பார்ப்பது இல்லை. மக்கள் ஏன் விக்ரமை ஒரு தலைவனாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு சீன் கூட இல்லை.  காரணமே இல்லாமல் ஒரு கூட்டம் அவரைப் பின் தொடர்வதை ஏற்க முடியவில்லை. யூகிக்கக் கூடிய ஃப்ளாஷ்பேக், கண்டவுடன் காதல், தெளிவில்லாத விக்ரமின் பின்னணி, விக்ரம் போகும் இடம் எங்கும் நொடியில் திடீர் பாசறைகள், போலீஸ் கார்த்திக்கின் பின்னே வால் பிடிப்பது, குருவி சுடுவது போல மனிதர்களை சுடும் ப்ருத்விராஜ் & கூட்டணி என ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்/கிளிஷேக்கள்.

அடுத்த பலவீனம் வசனம் மற்றும்  அதன் உச்சரிப்பு. சுஜாதாவின் வெற்றிடம் படத்தில் பளிச் எனத் தெரிகிறது. உணர்ச்சிகளை நறுக் வார்த்தைகளில் வடிக்கும் ஜாலம் சுஹாசினிக்கு வர நிறைய வருடங்கள் பிடிக்கும். வசனங்களைச் சின்னதாக முணுமுணுத்தால் போதும் என நினைத்து  விட்டார் போல. வழக்கமாக மணிரத்னம் படத்தில் நெடுக ஆங்காங்கே தெரியும் இரண்டு வரி "நகைச்சுவை மின்னல்கள்" மிஸ்ஸிங். விக்ரமும் ஐஸ்வர்யாவும் அவரவரின் உணர்ச்சிகளை சொல்ல உடல் மொழியை மட்டும் வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு தடுமாறுகின்றனர் அல்லது இசையில் ஒளிந்து கொள்கிறார்கள். நேரடி தமிழ்ப் படமாக இருப்பினும், நமக்கு டப்பிங் படம் பார்த்த உணர்வே மிஞ்சுகிறது. ரீரெகார்டிங்கின் போது எல்லோரும் ஒரு பத்தடி தள்ளி நின்று பேசி இருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது.  என்ன பேசுகிறார்கள் என கண்டுபிடிப்போர்க்கு குலுக்கலில் திருட்டு விசிடி கொடுக்கலாம்.

விக்ரம், சொன்னதைத் திறமையாகச் செய்திருக்கிறார். தேவையானவற்றை அவரிடம் சொல்வதில்தான், மணி கோட்டை விட்டிருக்கிறார்.  கோபமும், விரக்தியும் சேர்த்து நம்மை உருட்டு விழிகளால் மிரட்டுகிறார்.  சில இடங்களில் மாவோயிஸ்ட்களை நினைவு படுத்துகிறார். ஆனால், அவர் "பக்பக்பக்"க்கும் போதும் "டண்டண்டண்"ணும் போதும் நமக்கு கொஞ்சம் தலை "நபநப"க்கிறது. பயம், பாசம், சஞ்சலம், தவிப்பு என ஐஸ்வர்யாவின் கண்கள் பேசும் மொழிகள் கோடி கோடி. டப்பிங் தவிர அவரின் உழைப்பு ஆச்சர்யம். முதுகு நிமிர வேலை வாங்கி இருக்கிறார்கள். ப்ருத்விராஜ் கோபமாக காட்டுக்குள் ஒரு என்கவுன்டர் பிக்னிக் போய் வருகிறார். பிரபு தனக்குக் கொடுத்த சப்ளையர் வேலையை நன்றாக பார்க்கிறார். கார்த்திக் சாதரணமாகப் பேசினாலே புரிவது சிரமம். ரஹ்மான் வேற இவர் பேசுவதை பாதி சாப்பிட்டு விடுகிறார். காமடி செய்ய முயற்சித்து மரங்களிலும் ஜீப்பிலும் நம் கழுத்திலும் தொங்குகிறார். ப்ரியாமணி, ரஞ்சிதா, வையாபுரி,  இன்னும் சில உபரிகள் கொசுறு போல வந்து போகின்றனர்.

பாடல் ஒளிப்பதிவில் கலக்கும் மணி இதில் கலங்கி இருக்கிறார். "உசுரே போகுதே" வில் நம் உசிர் கரைக்கிறார் ரஹ்மான். பின்னணியில் கொஞ்சம் சத்தமும் திகிலும் கலந்து மிரட்ட முயல்கிறார்.

பார்வைக்கு விருந்து பரிமாறி இருக்கும் மணி, மற்றவற்றில் சில இடங்களில்  பாதிக் கிணற்றிலும், பல இடங்களில் தலை குப்புற  பாதாளத்திலும்  விழுகிறார். கேமராமென்களுக்காக ஒரு முறை போய் வரலாம்.